பண்டை தமிழர்களின் இல்வாழ்வை பற்றி நாம் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவுவது அகப்பொருள் நுால்கள். அகப்பொருள் நுால்கள் தமிழில் பல இருப்பினும் 'அகம்' என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் நுால் அகநானூறு மட்டுமேயாகும். கணவன் மனைவி இடையிலான உறவை பற்றியும், ஆற்று மணலிலும், ஏரிக் கரைகளிலும், மாந்தோப்புகளிலும் வளர்ந்த தலைவன் தலைவி இடையிலான காதலை பற்றியும், நாம் கற்பனை செய்ய முடியாத உவமைகளுடனும், இலக்கிய செரிவுடனும் சுவைபட வழங்குகிறது அகநானூறு.
இன்று நாம் மணிமிடை பவளத்தில் உள்ள முல்லை திணை பாடல் ஒன்றை காண்போம்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
- மதுரை மள்ளனார்.
'எண்ணையில் நனைத்து போன்ற பிசுபிசுப்பான தோலும், கரிய சிறகுகளும் உடைய வௌவால், பகலில் உறைவிடமாக கொண்ட உயர்ந்த கிளைகளையுடைய மரத்தை மாலை நேரங்களில் பிறிந்து சென்றுவிடும். அதுபோல மொட்டவிழ்ந்த ஒளிபொருந்திய முல்லை பூவும் வண்டினத்தை தன்னைவிட்டு பிரிந்து செல்லாது தடுத்துக் கொண்டிருக்கும் இந்த குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில் அவர் என்னை பிரிந்து சென்று என்னை துயர் கொள்ள செய்துவிட்டார். அவர் வந்தாலும் வராவிட்டாலும் இனிய முகத்துடன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்!.. தோழி!' என்று நிலவினும் குளிர்ச்சி பொருந்திய தன் கண்கள் சிவக்கும்படி புலம்பினாள் என்று பாணன் வந்து தூது சொன்னான். தேர்ப்பாகனே ! நாம் கருதி வந்த வினை முடியவில்லை. ஆயினும் நீ புல்லை நிரம்பத்தின்ற குதிரையை விரைவாக தேரினில் பூட்டி இல்லம் நோக்கி செலுத்துக.
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment